Sunday, March 7, 2010

மாணிக்கவாசகர் அருளிய 'திருவெம்பாவை'

திருவெம்பாவை
(மாணிக்க வாசகம்)



திருவெம்பாவை நாட்களில் அதிகாலையில் படிக்க வேண்டிய பாடல்கள் குறித்து ஒரு சிறு கண்ணோட்டம்.

அருள் வடிவானது இறை, அன்பின் திருஉருவம் இறை, சிந்திக்குந்தோறும் தெவிட்டாத அமுது இறை. இந்த இறையை ஏத்தி வழிபடுவதுதான் மானிடப் பிறவியின் உயர்வு ஏற்றம் எல்லாம். அதுவும், மகளிர் வழிபாடே தனி. இறையை சக்தியாகப் பார்க்கின்ற பொழுது தமக்கும் அதற்கும் ஒரு தொடர்பு உண்டு என்பதை மகளிர் உணர்கின்றார்கள். இந்த உணர்ச்சியின் அடிப்படையில் எழுந்த ஒளிக்கதிர்தான் திருவெம்பாவை.

திருவெம்பாவை : திரு, தெய்வத் தன்மையைக் குறிக்கின்றது. எம்- என்பது உயிர்த் தன்மையை உணர்த்துகின்றது. பாவை - வழிபாட்டிற்கு உகந்த உருவம். ஆகவே திருவெம்பாவையின் திரண்ட பொருள், தெய்வத்தன்மை வாய்ந்த திருவருள் எங்களோடு இணைந்து இயங்குகின்றது; எங்களுக்குத் துணையாய் நிற்கின்றது; நாங்கள் செய்யும் நோன்பினைப் பாவைத் திருவுருவில் நின்று ஏற்கின்றது. - ஏற்றுப் பயனளிக்கிறது என்பதாகும். இப்பாடல்களில் பாவை சிறப்பிடம் பெற்றதால், ஒவ்வொரு பாடலின் முடிவிலும் ‘எம் பாவாய்' என்று அமைந்துள்ளது. ஏனென்றால், இந்தத் திருத்தொடரை இடைவிடாது நினைவுகூர்தல் வேண்டும். ‘ஏலோரெம்பாவாய்' என்பதில் ஏலும் ஓரும் அசைகள்; பாவாய் - விளித்தல். பாவை நோன்பு நோற்கும் பெண்கள் ‘பாவாய்' என அழைக்கப்படுகின்றனர்.

சிவபெருமானே குருவாக வந்து மாணிக்கவாசகரை தடுத்தாட் கொண்டார். சைவ சமய குரவர்கள் நால்வர்களுள் ஒருவரான மாணிக்கவாசகரை: இந்த மார்கழி மாதத்தில் அவரது திருவெம்பாவையும், திருப்பள்ளியெழுச்சியையும் என்றுமே முக்கியமானதொன்றாகும் .

மாணிக்கவாசகரால் எழுதப்பட்ட பெரும் நூல்கள் இரண்டு: 1.திருவாசகம்; 2. திருக்கோவையார். இவற்றுள் திருவாசகம் என்பது ஒரு பெரிய தொகுப்பு நூல். இதில் மொத்தம் 51 பாடல்நூல்கள் உள்ளன. அவற்றுள் பத்துப்பத்துப் பாடல்களாகப் பாடிய பதிகநூல்களே அதிகம். நீண்ட பாடல்களாக விளங்குபவை சிவபுராணம், கீர்த்தித் திருவகவல், திருவண்டப்பகுதி, போற்றித் திருவகவல், திருச்சதகம் ஆகியவை. இவற்றில் பல பாடல்கள் புகழ்பெற்றவையாய் விளங்கிடினும், மிக அதிகமாக வழங்கப்படுபவை, சிவபுராணமும் திருவெம்பாவையும், திருப்பள்ளியெழுச்சியும் தான்.



குருந்த மரத்தடியில் சிவபெருமான் குருவாய் உபதேசம் செய்த காட்சி

தொல்லை யிரும்பிறவி சூழும் தளை நீக்கி
அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே
எல்லை மருவா நெறியளிக்கும் வாதவூர்
எங்கோன் திருவாசகம் என்னும் தேன்.

செய்யுள்:

1-
ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்
சோதியை யாம்பாட கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ! வன்செவியோ ? நின் செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்த்திய வாழ்த்தொலி போய்
வீதிவாய் கேட்டலுமே விம்மி விம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின் மேல் நின்றுங் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எம் தோழி பரிசேலோ ரெம்பாவாய்!

2-
பாசம் பரஞ்சோதிக் கென்பாய் தீராப்பகல் நாம்
பேசும்போது எப்போது இப்போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையே? நேரிழையீர்
சீ! சீ! இவையும் சிலவோஏசும் இடமீதோ? விண்ணோர்கள்
ஏத்துதற்குக்கூசும் மலர்ப்பாதந் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கன்பார்? யாம் ஆரேலோர் எம்பாவாய்!

3-
முத்தன்ன வெண்ணகையாய்! முன்வந்தெதிர் எழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதன் என்றள்ளுறித்
தித்திக்க பேசுவாய் வந்துன் கடை திறவாய்!
பத்துடையீர்! ஈசன் பழவடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மை தீர்த்தாண்டாற் பொல்லாதோ
எத்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியோமோ?
சித்தம் அழகியார் பாடாரோ? நம் சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்.!

4-
ஒண்ணித்திலநகையாய்! இன்னம் புலர்ந்தின்றோ?
வண்ணக் கிளி மொழியார் எல்லாரும் வந்தாரோ?
எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே!
விண்ணுக் கொரு மருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக் கினியானைப் பாடி கசிந்துள்ளம்உள்நெக்கு
நின்றுருக யாமாட்டோம் நீயே வந்து
எண்ணிக் குறையில் துயில் ஏலோ ரெம்பாவாய்!

5-
மாலாறியா நான்முகனும் அறியா மலையினை நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலூறு தேன்வாய் படிறீ கடை திறவாய்!
ஞாலமே விண்ணே பிறவே அறிவறியான்
கோலமும் நமமையாட் கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடி சிவனே! சிவனே! என்று
ஓலம் இடினும் உணராய் உணராய் காண்!
ஏலக்குழலி பரிசேலோர் எம்பாவாய்!

6-
மானே! நீ நென்னலை நாளை வந்துங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறனே அறிவரியான்
தானே வந்தெம்மை தலையளித்தாட் கொண்டருளும்
வான் வார் கழல் பாடி வந்தோர்க்குன் வாய் திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்கும் தம் கோனைப் பாடேலோ ரெம்பாவாய்!

7-
அன்னே! இவையுஞ் சிலவோ? பல அமரர்
உன்னற்கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்ப சிவன் என்றே வாய் திறப்பாய்
தென்னா! என் னாமுன்னம் தீ சேர் மெழுகொப்பாய்
என்னானை என் அரையன் இன்னமுதென் றெல்லோமும்
சொன்னோங் கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர் போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசே லோர் எம்பாவாய்

8-
கோழி சிலம்ப சிலம்புங் குருகெங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் வெண் சங்கெங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப் பொருளை பாடினோம் கேட்டிலையோ?
வாழியீதெனன உறக்கமோ? வாய் திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ?
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைப்பங்காளனையே பாடேலோ ரெம்பாவாய்!

9-
முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளே!
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே!
உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்
உன்னடியார் தாள் பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்;
அன்னவரே எங்கணவர் ஆவார் அவர் உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய் பணி செய்வோம்;
இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோ மேலோர் எம்பாவாய்!

10-
பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாத மலர்
போதார்ப் புணை முடியும் எல்லாப் பொருள் முடிவே!
பேதை ஒரு பால் திருமேனி ஒன்றல்லன்
வேத முதல் விண்ணோரும் மண்ணுந் துதித்தாலும்
ஓத உலவா ஒரு தோழ்ந் தொண்டருளன்
கோதில் குலத்தவன்றன் கோயிற் பிணாப்பிள்ளைகாள்!
ஏதவன் பேர்? ஏதவன் பேர்? ஆர் உற்றார்? ஆர் அயலார்?
ஏதவனைப் பாடும் பரிசேலோ ரெம்பாவாய்!


11-

மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேரென்ன
கையார் குடைந்து குடைந்துன் கழல் பாடி
ஐயா! வழியடியோம் வாழ்ந்தோங்காண்! ஆரழற் போல்
செய்யா! வெண்ணீறாடி! செல்வா! சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா!
ஐயா! நீ ஆட்கொண்டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமையேலோ ரெம்பாவாய்!

12-

ஆர்த்த பிறவித் துயர்கெட நாம் ஆர்த்தாடும்
தீர்த்தன்! நற்தில்லை சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன்! இவ்வானுங் குவலயுமும் எல்லாமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வலைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவந் செய்ய அணிகுழல் மேல் வண்டார்ப்ப
பூத்திகழும் பொய்கை குடந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனை நீர் ஆடேலோர் எம்பாவாய்!


13-
பைங்குவளைக் கார்மலராற் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தாற் பின்னும் அரவத்தால்
தங்கண் மலம் கழுவுவார் வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து நம்
சங்கந் சிலம்ப சிலம்பு கலந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல் பொங்க
பங்கயப் பூம்புனல் பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்!

14-
காதார் குழையாடப் பைம்பூண் கலனாட
கோதை குழலாட வண்டின் குழாமாட
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதித் திறம்பாடி அந்தமா மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளை தன்
பாதத் திறம் பாடி ஆடேலோர் எம்பாவாய்!

15-
ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
ஓரொருகால் வாயோவான் சித்தங் களிகூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்ப
பாரொருகால் வந்தணையாள் விண்ணோரைத் தான்பயாள்
பேரரையற் கிங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் அட்கொள்ளும் வித்தகர்தாள்
வாருருவ பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவ பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்!


16-
முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்
என்னத் தைகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்
பொன்னஞ் சிலம்பிற சிலம்பித் திருபுருவம்
என்னச் சிலைக்குலவி தந்தெம்மை ஆளுடையான்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னியவன் நமக்கும் முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்!

17-
செங்கணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்,
எங்கும் இலாததோர் இன்பம் நம் பாலதாக,
கொங்குண் கருங்குழலி, நந்தம்மைக் கோதாட்டி,
இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்,
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை,
அங்கண் அரசை, அடியோங்கட்கு ஆரமுதை,
நங்கள் பெருமானைப் பாடி, நலம் திகழப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடு, ஏலோர் எம்பாவாய்.

18-
அண்ணாமலையான் அடிக்கமலம் சென்று இறைஞ்சும்,
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறு அற்றாற்போல்,
கண்ணார் இரவி கதிர் வந்து கார் கரப்பத்,
தண்ணார் ஒளி மழுங்கித் தாரகைகள் தாம் அகலப்,
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப், பிறங்கு ஒளிசேர்
விண்ணாகி மண்ணாகி, இத்தனையும் வேறாகிக்,
கண்ணார் அமுதமுமாய் நின்றான் கழல் பாடிப்,
பெண்ணே, இப்பூம்புனல் பாய்ந்து ஆடு, ஏலோர் எம்பாவாய்.

19-
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று
அங்கப் பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள்
எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
கங்குல் பகல் எங்கண் மற்றொன்றும் காணற்க
இங்கிப் பரிசே எமக்கு எங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்

20-
போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம்
போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய்

திருச்சிற்றம்பலம்..

நன்றி: பிரியன் (Facebook)

No comments:

Post a Comment

தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.. :)

விருப்பம் :)