Wednesday, June 8, 2011

யாதும் ஊரே யாவரும் கேளிர் (கணியன் பூங்குன்றனார்)

யாதும் ஊரே யாவரும் கேளிர்
(கணியன் பூங்குன்றனார்)


பாடல்: 192
திணை: பொதுவியல் துறை -பொருண்மொழிக் காஞ்சி

யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;

தீதும் நன்றும் பிறர்தர வாரா ;

நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ;

சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்

இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,

இன்னா தென்றலும் இலமே; ‘மின்னொடு

வானம் தண்துளி தலைஇ, ஆனாது

கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று

நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்

முறைவழிப் படூஉம்’ என்பது திறவோர்

காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்

பெரியோரை வியத்தலும் இலமே;

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.


நன்றி: http://entamilkavithaigal.blogspot.com/2009/12/blog-post_4501.html

விளக்கம்:

யாதும் ஊரே,யாவரும் கேளிர்;
-எல்லா ஊரும் எங்கள் ஊர்தான், எல்லோரும் எங்கள் உறவுகள் தான்;

தீதும், நன்றும், பிறர் தர வாரா;
-தீயது, நல்லது என்பவை பிறர் தந்து வருபவை இல்லை;

நோதலும், தணிதலும், அவற்றோர் அன்ன;
-துன்பமும், அதன் தீர்வும் கூட அதுபோல் தான்.

சாதலும் புதுவது அன்றே! வாழ்தல்
-செத்துப் போவது ஒன்றும் புதியது இல்லை.

இனிது என மகிழ்ந்தன்றும் இலமே! முனிவின்
-வாழ்க்கை இனியது என்று சொல்லி மகிழ்ச்சிப் படுவதும் தவறு.

இன்னாது என்றலும் இலமே! மின்னொடு
-மாறி, வாழ்க்கையில் இருந்து விலகி ஏற்கும் துறவு கொடியது என்று சொல்லுவதும் தவறு;

வானம் தண் துளி தலைஇ ஆனாது,
-வானம், மின்னல் வெட்டும் மழையாய் குளிர்ந்த துளிகளைப் பெய்ய,

கல்பொருது இரங்கும், மல்லல் பேர்யாற்று
-கல், மண் ஆகியவற்றைப் புரட்டிக் கொண்டு இறங்கி, பெருகி வரும் ஆற்று நீரில் சிக்கி,

நீர்வழிப் படூஉம் புனை போல், ஆருயிர்
-அதன் தடத்திலே போகும் புனையைப் [மிதவை (அ) சிறு படகு] போல, அரிய உயிரியக்கம் ஆனது

முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
-முன்னர் இட்ட முறைவழியே போகத் தான் செய்யும் (நியதி வழிப் படும்) என்று வாழ்க்கையின் திறம் அறிந்தவர்கள் சொல்லுவார்கள்.

காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியில்
-அந்த காட்சியில் நாங்கள் தெளிந்தோம் ஆகையால், [இந்தப் பேருண்மையைக் கண்டு அனுபவத்தால் தெளிவு பெற்றோம் ஆகையால்]

பெரியோரை வியத்தலும் இலமே!
-பெரியவர்களைக் கண்டு வியத்தலும் தவறு; [அறிவிலோ செல்வத்திலோ பிறப்பிலோ நம்மை விடவும் மேலானவரைக் கண்டு போற்றித் துதித்தலும் செய்யோம்.]

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!
-சிறியவர்களை இகழ்தல் அதனிலும் தவறு. [நம்மை விடவும் கீழானவரைக் கண்டு சிறுமையாய் நடத்துதலை எண்ணவும் மாட்டோம்.]

நன்றி: http://vasantruban.blogspot.com/2012/03/blog-post.html?spref=bl

விருப்பம் :)