Sunday, December 4, 2011

பொன்னார் மேனியனே - சுந்தரர் தேவாரம் - திருமழபாடி


சுந்தரர் தேவாரம் - திருமழபாடி



பாடல் எண் : 1

பொன்னார் மேனியனே புலித்
தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்
கொன்றை யணிந்தவனே
மன்னே மாமணியே மழ
பாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனி
யாரை நினைக்கேனே.

பொழிப்புரை :

பொன்போலும் திருமேனியை உடையவனே , அரையின்கண் புலித்தோலை உடுத்து , மின்னல்போலும் சடையின் கண் , விளங்குகின்ற கொன்றை மாலையை அணிந்தவனே , தலைவனே , விலையுயர்ந்த இரத்தினம் போல்பவனே , திருமழபாடியுள் திகழும் மாணிக்கம் போல்பவனே , எனக்குத் தாய்போல்பவனே , இப்பொழுது உன்னையன்றி யான் வேறு யாரை நினைப்பேன் ?


பாடல் எண் : 2

கீளார் கோவணமுந் திரு
நீறுமெய் பூசியுன்றன்
தாளே வந்தடைந்தேன் தலை
வாஎனை ஏன்றுகொள்நீ
வாளார் கண்ணிபங்கா மழ
பாடியுள் மாணிக்கமே
கேளா நின்னையல்லால் இனி
யாரை நினைக்கேனே.

பொழிப்புரை :

கீளின்கண் பொருந்திய கோவணத்தையும் உடுத்து , திருநீற்றையும் திருமேனியிற் பூசினவனே , யாவர்க்கும் தலைவனே , வாள்போலும் கண்களையுடைய உமாதேவியை உடைய ஒரு பங்கினனே , திருமழபாடியில் திகழும் மாணிக்கம்போல்பவனே , அடியேன் , உனது திருவடியையே புகலிடமாக வந்து அடைந்தேன் ; இனி உன்னையல்லாது வேறு யாரை எனக்கு உறவாக நினைப்பேன் ? என்னை நீ ஏற்றுக்கொள் .


பாடல் எண் : 3

எம்மான் எம்மனையென் றனக்
கெட்டனைச் சார்வாகார்
இம்மா யப்பிறவி பிறந்
தேஇறந் தெய்த்தொழிந்தேன்
மைம்மாம் பூம்பொழில்சூழ் மழ
பாடியுள் மாணிக்கமே
அம்மான் நின்னையல்லால் இனி
யாரை நினைக்கேனே.

பொழிப்புரை :

மேகம் தவழும் அழகிய மாஞ்சோலை சூழ்ந்த திரு மழபாடியில் திகழும் மாணிக்கம் போல்பவனே , எங்கள் தலைவனே , ` என் தந்தை என் தாய் ` என்று இவர்கள் எனக்கு எள்ளளவும் துணையாக மாட்டார் ; அவர்களைத் துணையாக நினைத்துத்தான் இந்த நிலையில்லாத பிறவியை எடுத்துப் பின் பிறந்து இளைத்துப் போனேன் ; ஆதலின் , இப்பொழுது உன்னையல்லாது வேறு யாரை நினைப்பேன் ?


பாடல் எண் : 4

பண்டே நின்னடியேன் அடி
யாரடி யார்கட்கெல்லாம்
தொண்டே பூண்டொழிந்தேன் தொட
ராமைத் துரிசறுத்தேன்
வண்டார் பூம்பொழில்சூழ் மழ
பாடியுள் மாணிக்கமே
அண்டா நின்னையல்லால் இனி
யாரை நினைக்கேனே.

பொழிப்புரை :

வண்டுகள் ஆரவாரிக்கின்ற பூஞ்சோலைகள் சூழ்ந்த திருமழபாடியில் திகழும் மாணிக்கம்போல்பவனே , வானுலகில் வாழ்பவனே , உனக்கு அடியவனாகிய யான் அப்பொழுதே உன் அடியார் , அவர்க்கு அடியராயினார் ஆகிய எல்லார்க்கும் தொண்டு செய்தலை மேற்கொண்டுவிட்டேன் ; உன்னோடாயினும் , உன் அடியாரோடாயினும் தொடர்புகொள்ளாத குற்றம் என்பால் இல்லாதவாறு அதனைக் களைந்தொழித்தேன் ; ஆதலின் இனி , யான் உன்னை யன்றி வேறு யாரை நினைப்பேன் ?


பாடல் எண் : 5

கண்ணாய் ஏழுலகுங் கருத்
தாய அருத்தமுமாய்ப்
பண்ணார் இன்றமிழாய்ப் பர
மாய பரஞ்சுடரே
மண்ணார் பூம்பொழில்சூழ் மழ
பாடியுள் மாணிக்கமே
அண்ணா நின்னையல்லால் இனி
யாரை நினைக்கேனே.

பொழிப்புரை :

ஏழுலகங்களிலும் உள்ள எல்லா உயிர்கட்கும் அறிவாகியும் , அவை விரும்பப்படுகின்ற பொருள்களாகியும் , பண் அமைந்த இனிய தமிழ்ப்பாடலாகியும் , எல்லாப் பொருட்கும் மேலாயும் உள்ள மேலான ஒளியே , நிலம் நிறைந்த பூஞ்சோலைகள் சூழ்ந்த திருமழபாடியுள் திகழும் மாணிக்கம்போல்பவனே , தலைவனே , இப்பொழுது யான் உன்னைத் தவிர வேறு யாரை நினைப்பேன் ?


பாடல் எண் : 6

நாளார் வந்தணுகி நலி
யாமுனம் நின்றனக்கே
ஆளா வந்தடைந்தேன் அடி
யேனையும் ஏன்றுகொள்நீ
மாளா நாளருளும் மழ
பாடியுள் மாணிக்கமே
ஆளாய் நின்னையல்லால் இனி
யாரை நினைக்கேனே.

பொழிப்புரை :

அடியவர்கட்கு , முடிவில்லாத வாழ்நாளைக் கொடுக்கின்ற , திருமழபாடியில் திகழ்கின்ற மாணிக்கம் போல்பவனே , உனக்கு நான் ஆளாயினபின் , உன்னை யல்லது வேறு யாரை நினைப்பேன் ? எனக்கு இறுதிநாள் வந்து நெருங்கித் துன்புறுத்துவதற்கு முன்பே உனக்கு நான் ஆளாதற்பொருட்டு வந்து உன்னை அடைந்தேனாதலின் , அடியேனையும் உனக்கு உரியவனாக நீ ஏற்றுக் கொண்டருள் .


பாடல் எண் : 7

சந்தா ருங்குழையாய் சடை
மேற்பிறை தாங்கிநல்ல
வெந்தார் வெண்பொடியாய் விடை
யேறிய வித்தகனே
மைந்தார் சோலைகள்சூழ் மழ
பாடியுள் மாணிக்கமே
எந்தாய் நின்னையல்லால் இனி
யாரை நினைக்கேனே.

பொழிப்புரை :

பொருத்து வாய் உடைய குழையை அணிந்தவனே , சடையின்கண் பிறையைத் தாங்கியுள்ளவனே , வெந்து நிறைந்த நல்ல வெண்டிரு நீற்றை அணிந்தவனே , இடபத்தை ஏறும் ஊர்தியாகக் கொண்ட சதுரப்பாட்டினை உடையவனே , அழகு பொருந்திய சோலைகள் சூழ்ந்த திருமழபாடியுள் திகழும் மாணிக்கம்போல்பவனே , என் தந்தையே , நான் உன்னை யல்லாது வேறு யாரை நினைப்பேன் ?


பாடல் எண் : 8

வெய்ய விரிசுடரோன் மிகு தேவர்
கணங்களெல்லாம்
செய்ய மலர்களிட மிகு
செம்மையுள் நின்றவனே
மையார் பூம்பொழில்சூழ் மழ
பாடியுள் மாணிக்கமே
ஐயா நின்னையல்லால் இனி
யாரை நினைக்கேனே.

பொழிப்புரை :

வெப்பமான விரிகின்ற கதிர்களை யுடைய பகலவன் முதலாக மிகுந்த தேவர் கூட்டங்கள் எல்லாம் , நல்ல மலர்களை இட்டு வழிபட , அவர்கட்கு மிகவும் நேர் நின்று அருள் செய்கின்றவனே , இருள் நிறைந்த அழகிய சோலைகள் சூழ்ந்த திருமழபாடியுள் திகழ்கின்ற மாணிக்கம் போல்பவனே , என் தலைவனே , அடியேன் இப்பொழுது உன்னை யல்லாது வேறு யாரை நினைப்பேன் ?


பாடல் எண் : 9

நெறியே நின்மலனே நெடு
மாலயன் போற்றிசெய்யும்
குறியே நீர்மையனே கொடி
யேரிடை யாள்தலைவா
மறிசேர் அங்கையனே மழ
பாடியுள் மாணிக்கமே
அறிவே நின்னையல்லால் இனி
யாரை நினைக்கேனே.

பொழிப்புரை :

உயிர்களுக்கு நன்னெறியாய் நிற்பவனே , மலத்தாற் பற்றப்படாதவனே , நீண்ட திருமாலும் பிரமனும் ஏத்தெடுக்கும் தியானப் பொருளே , நற்பண்புடையவனே , கொடிபோலும் இடை யினையுடைய உமாதேவிக்குக் கணவனே , மான் கன்று பொருந்திய அகங்கையை யுடையவனே , திருமழபாடியுள் திகழும் மாணிக்கம் போல்பவனே , அறிவு வடிவானவனே , அடியேன் , இப்பொழுது உன்னை யல்லாது வேறு யாரை நினைப்பேன் ?


பாடல் எண் : 10

ஏரார் முப்புரமும் மெரி
யச்சிலை தொட்டவனை
வாரார் கொங்கையுடன் மழ
பாடியுள் மேயவனைச்
சீரார் நாவலர்கோன் ஆ
ரூரன் உரைத்ததமிழ்
பாரோர் ஏத்தவல்லார் பர
லோகத் திருப்பாரே.

பொழிப்புரை :

அழகு பொருந்திய மூன்று புரங்களும் எரிந்தொழியுமாறு வில்லை வளைத்தவனும் , கச்சால் கட்டப்பட்ட தனங்களை யுடையவளாகிய உமாதேவியுடன் திருமழபாடியுள் விரும்பி வீற்றிருப்பவனும் ஆகிய சிவபெருமானை , புகழ் நிறைந்த திருநாவலூரில் உள்ளார்க்குத் தலைவனாகிய நம்பியாரூரன் பாடிய இத்தமிழ்ப் பாடல்களைப் பாட வல்லவர்களாகிய மக்கள் , சிவலோகத்தில் இனிது வீற்றிருப்பார்கள் .


5 comments:

  1. பொன்னார் மேனியனே!!! அற்புதம்!!.. என்ன அருமையான செந்தமிழ் தேவார பாடல்கள்...
    தங்களின் அர்பணிப்புக்கு அடியேனின் வந்தனம்.. மிக்க நன்றி!!! தங்கள் சேவையை மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. ஓம்சிவசிவஓம்

    ReplyDelete
  3. சுந்தரர் தேவாரம் என்றாலும் திருவாசகம் போன்று மனதை உருக்குகிறது. திருச்சிற்றம்பலம்.🙏🙏🙏

    ReplyDelete
  4. 💢அற்புதமானட பாடல் வரிகள்💢

    💢படிக்கப்படிக்க மனது மகிழ்கிறது....💢
    🙏இறைவனின் பெருமையை சுந்தரர் சொல்லச்சொல்ல "அப்பப்பா" ......மனம் வேறு உலகத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது....💢

    ☘️ஆழ்ந்த கவலை கொண்ட எவரும் இந்தப் பாடலைப் பாடினால்
    நிச்சயம் மனம் தெளிவு பெறும்
    என்பது என் அனுபவம் வாய்ந்த உண்மை....☘️
    🙏 திருச்சிற்றம்பலம் 🙏

    ReplyDelete
  5. என் கண்களை கலங்க வைத்த பாடல்.. நன்றி

    ReplyDelete

தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.. :)

விருப்பம் :)